இறைத்தூதரின் இயற்கை மருத்துவம்

பால் உணவாகவும், மருந்தாகவும் அமையும்: பொதுவாக, பசும்பாலில் உடல் வளர்ச்சிக்கான புரதங்கள் அதிகமிருப்பதால் எலும்புகளைப் பலப்படுத்தி உடல் எனும் வீட்டைத் தாங்கும் தூணாகவும் அது அமையும்.

வெள்ளைநிறப் பசும்பால்: களைப்பையும், சோம்பலையும் போக்கும்.

காரம் பசும்பால்: சளி, இருமல், காசம் மற்றும், கண்நோய்கள், பித்த நோய்கள், ரத்த நோய்கள் இவற்றை நீக்கி உடல் வனப்பை வளப்படுத்தும்.  அதிகதாகத்தைத் தணிக்கும்.

எருமைப் பால்:  உடல் பலத்தை அதிகரிக்கும்.  என்றாலும், மந்தத் தன்மையைத் தானமாகத் தந்த, புத்தியின் ஒளிமை மங்கச் செய்யும்.

வெள்ளாட்டுப் பால்:  வாதம், பித்தம், கபம் இவற்றைச் சரிப்படுத்தி பசியைத் தூண்டும்.

காசநோயைக் கட்டுப்படுத்தும் தன்மை ஆட்டுப் பாலில் இருக்கிறது. அல்சர் என்ற வயிற்றுப் புண்ணை ஆட்டுப்பாலல் முற்றிலும் குணப்படுத்தும்.

ஆட்டுப்பாலை வழக்கமாக அருந்தும் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் வருவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

மூளைத் திசுக்களின் சிதைவினால் ஏற்படக்கூடிய வாதநோயின் வலிகளை ஆட்டுப்பால் கையணைத்துத் தடுக்கும் தன்மையுடையது.

கோடையின் அத்தனைக் கொடுமைகளையும் தாங்கும் தகுதி பெற்றுள்ள ஒட்டகம் ஒரு அற்புதப் படைப்பாகும்.  ஆடுமாடுகளால் தாக்குப்பிடிக்க முடியாத வெப்பப் பகுதிகளிலும் அது ஒரு துறவியைப் போல் சங்கடம் இல்லாமல் வாழும்.

இலை தழைகளை உதிர்த்துவிட்டு மொட்டையாகி நிற்கும் மரங்களின் முட்களையும் தின்னும்.

கோடை வெயிலால் அதன் புறப்பகுதி சூடடைந்தாலும், உடலின் உட்பகுதி சூடாவதில்லை.

ஆட்டுப்பாலைவிட அதிக சக்தி வாய்ந்த ஒட்டகப் பாலில் நோய் எதிர்ப்பாற்றால் அதிகமிருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரபுநாட்டு மக்களுக்கும், பாலைவனப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் ஒட்டகப்பால் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.

இந்த உண்மையை இறைவன் இவ்வாறு தெரிவிக்கிறான்.

“(ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால் நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை இடையில் அதன் வயிற்றிலிருந்து கவப்பற்ற பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம்.  (அது) அருந்துவதற்கு மிக்க இன்பகரமானது.”       (அல்குர்ஆன் 16:66)

‘மரணத்தைத் தவிர மனிதர்க்கு ஏற்படும் எல்லா நோய்களுக்கும் கருஞ்சீரகத்தில் குணம் இருக்கிறது’ என்பது, ‘வெந்தயத்தின் அருமையை அறிந்தவர்கள், எடைக்கு எடை தங்கத்தைக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்’ என்பது நபிவாக்காகும்.

வெந்தயம், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் உண்டுவந்தால் சர்க்கரை நோயை வியக்கத்தக்க வகையில் கட்டுப் படுத்துவதோடு, உடல் உறுப்பக்களைக் காவல் காக்கும் பொறுப்பையும் அவை ஏற்றுக் கொள்ளும்.

கருஞ்சீரகக் கசாயத்தால் வாய்க் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.

கோதுமையில் செய்த உணவுப் பொருட்களும், சுரைக்காயும், வெள்ளரிக்காயும் வேந்தர் நபி(ஸல்)அவர்கள் விரும்பி உண்பவையாகும்.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் ஆற்றல் மிகுந்த முள்ளங்கியையும் விருப்பத்தோடு உண்பார்கள்.

முள்ளங்கிச் சாற்றை ஐம்பது மி.லி. அளவில் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் முற்றிலும் நீங்கும்.

தீராத வயிற்று வலியால் அவஸ்தைப் படுவர்களும் முள்ளங்கிச் சாற்றை ஒருவாரம் குடித்தால் அந்த வேதனையிலிருந்தும் விடுதலை பெற்றுவிடலாம்.

பசியைத் தூண்டும் முள்ளங்கி, நரம்புகளையும் பலப்படுத்தும்.

வெங்காயத்தைப் பச்சையாகத் தின்றுவிட்டு உடனே வெளியேறிச் செல்வதை வேந்தர் நபி(ஸல்) அவர்கள் விரும்பவில்லை, அந்த நாற்றம் மற்றவரை அருவருப்பு அடையச் செய்யும் என்பதால்.

சமைத்து உண்பதை அவர்கள் விரும்பி இருக்கிறார்கள் என்பதை அன்னை ஆயிஷா(ரளி) அவர்களின் வாய்மொழிகளில் இருந்து அறிய முடிகிறது.

உஷ்ணத்தைக் கட்டுப் படுத்துவதில் கருத்தோடு செயலாற்றும் வெங்காயம், கோடைக்கால மயக்கம் தலை கிறுகிறுப்பு, தளர்ச்சி, இரத்த அழுத்தம்இ படபடப்பு முதலான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இரத்தத்தில் கலந்து நஞ்சையும் வெங்காயம் வெளியேற்றும், நரம்புத் தளர்ச்சியை நீக்கும், கபத்தைக் கண்டிக்கும் புத்துணர்வூட்டும்.

பாலுடன் சின்ன வெங்காயம், பூண்டுப் பற்கள் சிலவற்றைச் சேர்த்துக் காய்ச்சி இளம் சூட்டோடுப் பருகிவந்தால் இதயத்தைத் திடப்படுத்தி நரம்புகளுக்குப் பலமூட்டி, இதய அதிர்ச்சி, பக்கவாதம் முதலான பாதிப்புக்கள் ஏற்படாமல் தடுத்துவிடும்.

பூண்டைப் பச்சையாகத் திண்பதைப் பூமான் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய திரிதோஷங்களைப் பூண்டு சமப்படுத்தும்.  சிறுநீரகச் சிக்கல்களைத் தீர்த்து அவற்றின் செயல்திறனைச் சீராக்கும்.  மூட்டுக்களில் வீக்கத்தைக் குறைக்கும்.  தாதுபலத்தை அதிகரிக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.  காரத்தன்மை நிறைந்த பொருள் பூண்டு என்பதால் அளவறிந்து பயன்படுத்தினால் அளவற்ற நன்மைகளை அடையலாம்.

‘சூடான உணவை உண்ண வேண்டாம்.  இறைவன் நெருப்பை உணவாகத் தரவில்லை என்று, அண்ணல் நபி(ஸல்)அவர்கள் புத்தி சொன்னார்கள்.

சூடாக உண்போரின் உள்ளமும், உடலும் வெகுவாக சேதமடையும் என்பதை இன்றைய விஞ்ஞானம் சத்தியம் செய்து நிரூபித்துள்ளது.

‘குளிர்ச்சி மிகுந்த இரண்டு பொருட்களையோ, உஷ்ணம் மிகுந்த இரண்டு பொருட்களையோ ஒரே நேரத்தில் உண்டால், இரைப்பையின் இயக்கத்தில் தடுமாற்றம் நிகழும்’ என்றும், அதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

தாது பலத்தை அதிகரிக்கும் பேரீத்தம் பழம், மூளையைப் பலப்படுத்தும், துரிஞ்சிப் பழம், இரத்தத்தைச் சுத்தம் செய்து இதயத்தையும், ஈரலையும் பலப்படுத்தி தேகச் சூட்டைச் சமப்படுத்தும்.  மாதுளம்பழம், சிறுநீர்ச் சிக்கல்களைச் சீராக்கி உடல் சூட்டைத் தணிக்கும்.  தர்பூசணி, பல்வேறு பலன்களைத் தந்து உடல் நலனைக் காக்கும் அத்திப்பழம், இதயத்தையும், மூளையும் கவனமாகக் காத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பித்தத்தைச் சமப்படுத்தும்.  தர்பூஸ் பழம் முதலான பழவகைகளின் மருத்துவக் குணங்களை மனுக்குலத்தின் நன்மைக்காக வெளிப்படுத்திய மாநபி(ஸல்) அவர்களும், பழங்களை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

‘மாதுளம் பழம் ஒவ்வொன்றிலும் சொர்க்கத்தின் அமுதத்துளி அடங்கியிருக்கிறது’ என்பது, அண்ணல் நபியவர்களின் ஞானச் சொல்லாகும்.

தர்பூசணியுடன் பேரீத்தம் பழத்தைச் சேர்த்து உண்பது. ஒன்றின் உஷ்ணம் மற்றொன்றின் குளிர்ச்சியால் சமப்பட்டுவிடும் என்பது நபிமொழியாகும்.

எப்போதாவது பாலுடன் பேரீத்தம் பழத்தை வேகவைத்து கொஞ்சம் வெண்ணெய்யும் சேர்த்து நாயகம்(ஸல்) அவர்கள் பருகுவார்கள்.  இது ‘உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது’ என்றும் தெரிவித்தார்கள்.

“பேரீட்சை திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் செய்கின்றீர்கள்.  நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.”     (அல்குர்ஆன் 16:67)

இனம் பிரியாத பயத்தாலும் பீதியாலும் படபடப்பும் நடுக்கமும் அடைபவர்கள் ஐம்பது மி.லி அளவிலான திராட்ச்சைச் சாறு தினமும் பருகிவந்தால் இத்தகைய பலகீனம் விலகி மனம் வலிமையடையும்.

மேலும்இ குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உண்டாகும் மலச்சிக்கலையும் திராட்சைப் பழச்சாறு நீக்குவதுடன், பெண்களின் ஒழுங்கற்ற மாதவிலக்கையும் நேர்ப்படுத்தும்.

புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் திராட்சைப் பழத்தில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

காலையில் தயாரித்த பழச்சாற்றை மாலையிலும், மாலையில் தயாரித்ததைக் காலையிலும் பருகும்படி அன்னை ஆயிஷா(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பழச்சாற்றை அதிக நாட்கள் வைத்திருந்தால் அது மதுத்தன்மையைத் தனதாக்கிக் கொண்டுவிடும் என்பதால் அதைத் தடுத்துள்ளார்கள்.

‘திராட்சைச் சாறு மற்றும், பேரீத்தம் பழம், காய்ந்தத் திராட்சையை நீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்குள் பருகிவிட வேண்டும்’ என்பது நபிகளாரின் வழிகாட்டலாகும்.

‘புளிப்பேறு மதுவான எந்தவொரு பழச்சாறும் (ஹராம்)  விலக்கப்பட்டது’ என்று விளக்கினார்கள்.  ‘மது, மருந்தாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தக் கூடாது.

தீமைகள் அனைத்தின் அடித்தளமாக அது அமைகிறது’ என்பது அண்ணல் நபியவர்களின் எழிலுரையாகும்.

‘புளிப்படைந்த திராட்சைச் சாறு, எலிகுடித்த மீதத் தண்ணீர், புளிப்புச் சுவை மிகுந்த ஆப்பிள், பச்சைக் கொத்தமல்லி இவற்றை உட்கொள்வதாலும், பேன்களையும் மூட்டைப் பூச்சிகளையும் தீவைத்துக் கொல்வதாலும், பாலின உறுப்புகளை அடிக்கடிப் பார்ப்பதாலும் மண்ணறைகளின் அருகில் இருந்த வண்ணம் குர்ஆனை ஓதுவதாலும், கழுத்து நரம்பில் இருந்து இரத்தம் எடுத்துக் கொண்டிருந்தாலும் நினைவாற்றல் நீர்த்து மறதி மிகைத்து விடும் என்பவை கவனிக்கத்தக்க விஷயங்களாகும்.

நினைவாற்றலை அதிகரிக்க விரும்புபவர்கள் மேற்கண்ட செயல்களிலிருந்தும் தவிர்த்து விட்டு, தேனை மருந்தாக்கிக் கொண்டால் அழிந்து போன ஞாபக சக்தி மீண்டுவிடும் என்று கொமிவுல் கபீர் என்னும் நூல் தெரிவிக்கிறது.

அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு இஞ்சிமுறப்பாவை ரோமாபுரி அரசன் அன்பளிப்பாக கொடுத்தனுப்பினான்.  நபியவர்கள் மீதமுள்ளதைத் தங்கள் தோழர்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள் என்ற செய்தியை அபூசயீத்(ரளி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சுண்ணாம்பு நீக்கப்பட்ட இஞ்சிச் சாற்றில் சர்க்கரை சேர்த்து நாள் ஒன்றுக்கு ஒருதடவை வீதம் அருந்தி வந்தால் வயிற்றுக் கோளாறுகள் விலகும், புளியேப்பம் நீங்கும், நல்ல பசி ஏற்படும், தலை கிறுகிறுப்பு நிற்கும்.

நான்குத் தேக்கரண்டி இஞ்சிச் சாற்றுடன் நான்குத் தேக்கரண்டி தேன் கலந்து காலை மாலை அருந்தினால் உடல்வலி, அசதி, ஆயாசம் விலகுவதுடன் இதயம் சார்ந்த குறைபாடுகள் சகலமும் சரியாகிவிடும்.

இஞ்சியைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து எடுத்து ஒரு தேக்கரண்டி அளவில் காலை மாலை உண்டுவந்தால் பித்த மயக்கம், வாயுத்தொல்லை, வயிற்று உப்பிசம், அஜீரணம் முதலான பிரச்சனைகள் விலகுவதுடன் தொந்தி படிப்படியாகக் குறையும்.

“உமர் இறைவன் தேனீக்கு உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்.  மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்தகட்டிடங்களிலும் நீ கூடுகளை அமைத்துக்கொள்.

அன்றி, நீ எல்லா விதமான கனிகளின் மலர்களிலிருந்தும் அருந்தி, உன் இறைவனின் எளிதான வழிகளில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) புறப்படுகின்றது.  அதில் மனிதர்களுக்ளும் சொந்தமுண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.”   (அல்குர்ஆன்: 16:68, 69) 

                                               

தேனின் மகத்துவத்தை மறைமொழியும், மாநபி(ஸல்) அவர்களின் நாவுரையும் நயமாகத் தெரிவிக்கின்றன.

சில பிணிகளுக்கத் தேன் தனிமருந்தாகவும், பல நோய்களுக்குத் துணை மருந்தாகவும் பயன்படுகிறது.