ஏன் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கூட கொரோனா தொற்று ஏற்படுகின்றது???

கோவிட் நோய்க்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளை பெற்ற திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. துரை முருகன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியான உடன் பலருடைய சந்தேகம். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா வருமா? பிறகு எதற்கு தடுப்பூசி போட வேண்டும்?

இதற்கான எனது பதில் விளக்கங்கள்

முதல் விளக்கம்

கொரோனாவுக்கு எதிரான முதல் தலைமுறை தடுப்பூசிகள்  கோவிட் தொற்றை தடுக்காது.  கோவிட் நோயை தடுக்கும் விதத்திலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது தடுப்பூசி பெற்றவரை கொரோனா வைரஸ் தாக்கி தொற்று உண்டாக்கலாம்.ஆனால் அந்த தொற்று நிலை முற்றி அதற்கடுத்த நோய் நிலையாக மாறும் தன்மையை தடுப்பூசி தடுக்கும்.

Covid vaccines wont prevent against infection but they are proven to prevent DISEASE

அதிலும் தீவிர கொரோனா நோயை தடுக்கும் திறன் இரண்டு தடுப்பூசிக்கும் உண்டு என்பது இதுவரை வெளிவந்த ஆய்வுகளின் முடிவுகளி்ல் தெரிய வருகின்றது.

இரண்டாவது விளக்கம்

தடுப்பூசியைக் கொண்டு நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் இந்த தடுப்பூசிகளில் எத்தனை திறனுடன் அறிகுறிகளுடைய கொரோனா தொற்றை தடுக்கின்றன ? என்பதையும்  எத்தனை திறனுடன் தீவிர கொரோனா தொற்றை தடுக்கின்றன? என்பதையும் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.

 தடுப்பூசி பெற்றவர்களுக்கிடையேவும் அறிகுறிகளற்ற கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு என்பதையும் அத்தகைய வாய்ப்பை தடுப்பூசிகள் பெரிதாக மட்டுப்படுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசி பெற்றிருந்தாலும் கூட பெரிய அறிகுறிகளற்ற கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதற்காகத்தான் தடுப்பூசி பெற்றவர்களும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பேண வேண்டும் என்கிறோம்

மூன்றாவது விளக்கம்

தற்போது வரை அப்டேட் செய்யப்பட்டுள்ள  தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு முடிவுகளின் படி

கோவேக்சின் நோய் தடுக்கும் திறன் 80%

கோவிஷீல்டு நோய் தடுக்கும் திறன் 70%

அதாவது தடுப்பூசியை ஒருவர் போட்டுக்கொண்டால் அவர் 70-80% கொரோனா நோயில் இருந்து பாதுகாக்கப்படுவார்.  அதே சமயம் 20-30% அவருக்கு தடுப்பூசி பெற்றாலும் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

(ஆயினும் இரண்டு தடுப்பூசி ஆய்வு குழுக்களிலும் தடுப்பூசி பெற்றவர்களுக்கு அதற்குப்பிறகான காலத்தில்  கொரோனா நோய் ஏற்பட்டு ஒருவர் கூட  இன்னும் இறக்கவில்லை என்பது நற்செய்தி. )

எனவே தடுப்பூசிகளை பெற்றாலும் கூட 20-30% நோய் நிலையை அடையும் வாய்ப்பு உண்டு என்பதையும் அறிவியல் பூர்வமாக விளக்கியிருக்கிறேன்

நான்காவது விளக்கம்

இரண்டு தவணை தடுப்பூசிகளைப் பெற்றாலும் இரண்டாவது தவணையைப் பெற்ற பிறகு  கோவிஷீல்டு என்றால் இரண்டாவது டோஸ் போடப்பட்ட 14 நாட்கள் கழித்தும் கோவேக்சின் என்றால் இரண்டாவது தவணை போடப்பட்டதில் இருந்து 28 நாட்கள் கழித்தே முழுமையான எதிர்ப்பு சக்தி ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் பதிவு செய்கிறேன். எனவே இரண்டாவது தவணை எடுத்தாலும் மேற்சொன்ன கால இடைவெளிக்குள் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு

ஐந்தாவது விளக்கம்

வேரியண்ட்களின் வருகை

தற்போது இந்தியாவில் யூகே வேரியண்ட் , டபுள் ம்யூடண்ட் வேரியண்ட், தென் ஆப்பிரிக்க வேரியண்ட் பரவி இரண்டாம் அலையை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போதைய தடுப்பூசிகள் வேரியண்ட்களுடன் செயல்படும் போது அதன் முந்தைய செயல்திறனிலிருந்து குறையவே வாய்ப்பு உண்டு.

உதாரணம் – தென் ஆப்பிரிக்க வேரியண்ட்

உலகின் ஏனைய பகுதிகளில் 70% செயல்திறனுடன் இருக்கும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி

தென் ஆப்பிரிக்காவில் 22% ஆக குறைந்தது. எனினும் இந்திய தடுப்பூசிகள் வேரியணட்களுக்கு எதிராகவும் சிறப்பாக வேலை செய்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக அறிவியலாளர்கள் நிறுவி வருகின்றனர். இது நற்செய்தியாகும்.

எனினும் தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் சரி.

  • முகக்கவசம் அணிதல்
  • தனிமனித இடைவெளி பேணுதல்
  • அறிகுறிகளை அலட்சியம் செய்யாதிருத்தல்
  • கைகளை சோப் போட்டு கழுவுதல்
  • முடிந்தவரை வீடுகளுக்கும் இருத்தல்
  • பயணங்களைத் தவிர்த்தல்
  • அத்தியாவசியமின்றி முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறாதிருத்தல் ஆகியவை நம்மை காக்கும்

தடுப்பூசி ஒருவரை தீவிர கொரோனா ஏற்படுவதில் இருந்தும் கொரோனா மரணங்களில் இருந்தும் காக்கும் என்று தற்போது வரை கிடைத்துள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி போட்டுக் கொண்டு ஏனைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது  தவறு.

அலட்சியம் ஆபத்தானது எச்சரிக்கை உணர்வு உயிர்காப்பது

நன்றி

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை