தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தமிழகம் தழுவிய கண்டனப் பொதுக்கூட்டம்!

பெண்கள் பாதுகாப்பு மசோதா எனும் போலிப்பெயரில் மத்திய அரசு கொண்டுவர முனைந்துள்ள ஷரீஅத் சட்டத்திற்கெதிரான முத்தலாக் தடைச்சட்ட மசோதாவைக் கண்டித்து தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை 2018 ஜனவரி 5ஆம் தேதி அன்று தமிழகம் தழுவிய கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தியது.

தமிழகத்தில் 24 இடங்களில் இந்தக் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் மட்டுமின்றிப் பிற சமுதாயத்தைச் சேர்ந்த கட்சித்தலைவர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கெதிராகத் தம் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டம் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலவி அபூதாஹிர் சிராஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மௌலவி அ. முஹம்மது கான் பாகவி, மௌலவி கே.எம்.இல்யாஸ் ரியாஜி, மௌலவி சதீதுத்தீன் பாகவி, மௌலவி அப்துல்லாஹ் பாகவி, மௌலவி முஜீபுர் ரஹ்மான் பாகவி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, மூத்த வழக்கறிஞர் முத்துக் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் தம் கண்டன உரையைப் பதிவுசெய்தனர். இவர்களோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் தம் கண்டனத்தை அழுத்தமாகப் பதிவுசெய்தார். திருவள்ளூரில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மௌலவிகள் பலரின் கண்டன உரையோடு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தம் கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

திருவாரூரில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மௌலவி எஸ். ஃபக்ருத்தீன் ஃபாஸில் பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள், தமிழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா ஆகியோரும், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மௌலவி தர்வேஷ் ரஷாதி, அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மௌலவி அப்துல் ஹமீது பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், திருச்சியில் மௌலவி ரூஹுல் ஹக் ரஷாதி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி, இனாம்குளத்தூர் மௌலவி ஷாஹுல் ஹமீது ஜமாலி, காங்கிரஸ் பிரமுகர் வேலுச்சாமி முதலானோரும், திண்டுக்கல் மாவட்டத்தில் மௌலவி ஹபீப் முஹம்மது நத்வி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மார்க்க அறிஞர்கள், திமுக பிரமுகர் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி ஆகியோரும், கோவையில் இம்மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி அப்துர் ரஹீம் பாகவி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய ஊர்களிலிருந்து பல்வேறு மார்க்க அறிஞர்கள், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி பி.ஏ. காஜா முஈனுத்தீன் பாகவி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பல்வேறு மூத்த மார்க்க அறிஞர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ். மங்களம் இப்ராஹீம் தேவ்பந்தி தலைமையில் பல்வேறு மார்க்க அறிஞர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோரும், மதுரையில் மௌலவி முஹம்மது காசிம் பாகவி தலைமையில் மௌலவி முஹம்மது ரிழா பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் இணைந்து நடத்திய கண்டனக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலவி எம். அபுதாஹிர் பாகவி உள்ளிட்டோரும், மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் எம்.எஸ். ரிபாயி ரஷாதி, குணங்குடி அனீபா, நீடூர் அப்துர் ரஹ்மான் பாகவி, வடகரை ஷாஹுல் ஹமீது பாகவி முதலானோரும், புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். ஷரீப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் சகோ. சிபி சந்தர், பெங்களூரு ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரிப் பேராசிரியர் மௌலவி ஸைபுத்தீன் ரஷாதி முதலானோரும், ஈரோட்டில் மௌலவி உமர் ஃபாரூக் தாவூதி தலைமையில் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலீ மிஸ்பாஹி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், கடலூரில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவர் ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப் பொதுச் செயலாளர் மௌலவி அ. அப்துல் அஸீஸ் பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், கன்னியாகுமரியில் மௌலவி அபூசாலிஹ்-மாவட்ட காஜி தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மௌலவி அப்துர் ரஹ்மான் தங்ஙள் பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும் புதுச்சேரி-காரைக்காலில் சிறப்புப் பேச்சாளராக வடகரை ஷாஹுல் ஹமீது பாகவி முதலானோரும் தத்தமது கண்டன உரையைப் பதிவு செய்தனர்.

நீங்கள் குனிந்தால் நாங்களும் குனிவோம்; நீங்கள் நிமிர்ந்தால் நாங்களும் நிமிர்வோம். இது தொழுகையில் மட்டுமல்ல. இதோ நீங்கள் அழைத்தால் உங்கள் பின்னே ஓடோடி வருவோம்… என உலமாக்கள் தலைமையின்மீது நம்பிக்கை கொண்டு தன்முனைப்போடு வந்த மக்கள் திரள் என்பதைக் கண்டு கூடியிருந்த காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் வியந்தனர்.

-தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி