கொரோனா – தர்ம யுத்தம் 2.0

கொரோனாவுக்கான புதிய தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களில் இரண்டாவது அலை உலகம் முழுவதும் உருவாகியிருக்கிறது. தேர்தல் வரைக்கும் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த அரசுகள், ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் ஊரடங்கு மிரட்டலோடு கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சாதாரண அரங்கக் கூட்டங்களில் 200 பேர் கலந்து கொள்ளலாம். ஆனால், திருமணங்களில் நூறு பேர்தான் பங்கேற்க முடியும். அதே போல, இறப்பு நிகழ்வுகளில் 50 பேர்தான். டாஸ்மார்க் கடைகளில் எந்தக் கட்டுபாடும் இல்லை, பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை. இப்படி பல வினோதமான கட்டுப்பாட்டு நடைமுறைகளோடு கொரோனாவுக்கு எதிரான தர்ம யுத்தம் 2.0 முழு வீச்சில் துவங்கப்பட்டுள்ளது.

 திடீரென, கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிகரிக்க காரணம் என்ன? முதல் சுற்றிலேயே கடும் கட்டுப்பாடுகளை விதித்தும், பின்பற்றியும் வந்த அறிவியல் பூர்வமான மாநிலம் – கேரளா. அங்குள்ள மக்கள் இந்தியாவிலேயே அதிகம் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதால் மற்ற மாநிலங்களை விட கூடுதலாகவே சமூக இடைவெளியையும், முகக் கவசத்தையும் பின்பற்றினார்கள். சின்னச் சின்ன பெட்டிக் கடைகளில் இருந்து, பெரிய வணிக நிறுவனங்கள் வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அப்படியே பின்பற்றினார்கள் கேரள மக்கள். அண்டை வீட்டுக்காரர்கள் மாஸ்க் அணியவில்லை என்று காவல்துறைக்குப் புகாரளிக்கும் அளவிற்கு கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் பின்பற்றல். ஆனாலும், இந்த கொரோனாவுக்கு அறிவே இல்லை. உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் சொன்ன இவ்வளவு கடும் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றிய போதும் கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டும், அதிகரித்துக் கொண்டும் இருந்தது. தமிழகத்தில் லாக்டவுன் ஒன்று (கொரோனா தர்மயுத்தம் 1.0) துவங்கிய போது இருந்த பயம் மெல்ல விலகி, மாஸ்க்குகளை மக்கள் கழுத்துகளுக்கு இறக்கிக் கொண்டார்கள். கொரோனாவுக்கு பதிலாக, காவல் துறையின் அபராதத்துக்குப் பயந்து மாஸ்க்குகளைப் பாக்கெட்டுகளில் வைத்துக் கொண்டார்கள். ஏற்கனவே, சாதி – மதம் – அரசியல் என்று சமூகம் பின்பற்றுகிற இடைவெளி அதிகமாக இருந்ததாலோ என்னவோ – மக்கள் சமூக இடைவெளியைக் கைவிட்டு விட்டார்கள்.

ஆனால், என்ன ஆச்சரியம்? தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சர சரவென குறைந்தது. அலோபதி மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்தே இல்லை என்றாலும் அங்கு சிகிச்சை எடுப்பதே அறிவியல் பூர்வமானது என்றும், ’கொரோனா குணமாகும்’ என்று அறிவித்த சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, அக்குபங்சர் இவற்றில் சிகிச்சை எடுப்பது முட்டாள்தனம் என்றும் அரசு வட்டங்களும், அறிவியல் சதுரங்களும் அறிவித்தன. இன்னொருபுறம் அரசு உதவியோடு உருவாக்கப்பட்டிருந்த கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் மருத்துவர் அதிலிருந்து விலக்கப்பட்டார். ’கொரோனா பீதியைப் பரப்புவதற்கு பதில் சிகிச்சை அளிக்க முயற்சிக்கலாம்’ என்று சொன்ன அலோபதி டாக்டர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இப்படி ஏராளமான குளறுபடிகளுக்கு மத்தியில் கொரோனா பாதிப்பு குறைந்து , ஒருவழியாக தர்மயுத்தம் 1.0 முடிவுக்கு வந்தது.

சமூக இடைவெளி குறைந்ததால், மாஸ்க் அணியாததால், அரசாணைகளைப் பின்பற்றாததால் . . என இரண்டாவது அலைக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றை பிற்காலத்தில் ஆய்வு செய்து உண்மையைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். இப்போது, கொரோனா அதிகரிப்பில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் கொரோனாவின் இருப்பினை உறுதி செய்யும் சோதனைகள்.

கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் அதனை உறுதி செய்யும் பரிசோதனை முறைகளும் அறிமுகமாகி விட்டன. ஒரு சோதனை முறையை அறிமுகம் செய்வதற்கு முன்பு, வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் அறிவியல் பூர்வமான எல்லா விதிமுறைகளும் கைவிடப்பட்டு, அவசரகதியில் கொரோனா பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு பேரிடர் காலத்தில் இப்படி அறிவியல் விதிகளை அவசரத்துக்கு மீறிக் கொள்வது பரவாயில்லை என்று நாம் ஆறுதல் அடையலாம். ஆனாலும், RTPCR டெஸ்டின் ரிசல்ட்டிற்காக மட்டும் காத்துக் கொண்டிருக்காமல் ஸ்கேன் மூலமாகவும் அலோபதி டாக்டர்கள் கொரோனா முடிவுகளை அறிவிக்க ஆரம்பித்தார்கள். ஸ்கேன் எடுப்பதன் மூலம் எப்படி வைரசைக் கண்டுபிடிக்க முடியும்? ஸ்கேன் மூலமாக நுரையீரலின் சளி பாதிப்பை அறிந்து, கூடுதலான சளி இருந்தால் அது கொரோனாதான் என்று அவர்களாக முடிவு செய்து கொண்டார்கள். கொரோனா காலத்தில் வரும் சளி – கொரோனா சளியாகத்தானே இருக்க முடியும்? இப்படி ஸ்கேன் மூலமாக கொரோனா நோயாளிகளாக்கப்பட்டவர்கள் பலர்.

RTPCR மூலம் பரிசோதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பலருக்கு 14 நாட்கள் தனிமைப் படுத்துதலும், சிகிச்சையும் ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டன. சில மாநிலங்களில் 28 நாட்கள் கூட தனிமைப் படுத்துதலை மேற்கொண்டனர். அப்புறம்தான் RTPCR டெஸ்டில் நெகடிவ் வந்தது. ஆனால், பல மாதங்களுக்குப் பிறகு ஒரு வாரத்தில் கொரோனா போய்விட்டது. அதன்பின்பு, மூன்று நாட்களில். . . இப்போது சிலருக்கு ஒரு நாளில், சிலருக்கு இரண்டு நாட்களில் போய்விடுகிறது. இதையும் கூட, கொரோனா போய் விடுவது வைரசின் விருப்பம் அதற்கும் நம் டெஸ்டுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று விட்டு விடலாம்.

RTPCR டெஸ்ட் இல்லாமல், புதிய ரெடிமேட் டெஸ்டுகளை பல நாடுகள் கண்டுபிடித்தன. சீனாவில் இருந்து நம் நாட்டிற்குக் கூட அப்படியான டெஸ்ட் கிட்டுகள் வந்து சேர்ந்தன. ஓரிரு நாட்களில் அவை தவறான ரிசல்ட்டுகளைக் காட்டுகின்றன என்று திருப்பி அனுப்பி விட்டோம். அந்த கிட்டுகள் ஏன் அதற்குப் பிறகு வரவேயில்லை? உலக ஆராய்ச்சியாளர்கள் ரெடிமேட் டெஸ்டுகளுக்கான ஆராய்ச்சியில் அக்கறை செலுத்தவில்லையா? ரெடிமேட் கிட் என்றால் என்ன தெரியுமா? ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை அறிய மருந்துக் கடைகளில் விற்கும் கார்டுதான் இந்த ரெடிமேட் கிட். அதில் சிறுநீரை சில துளிகள் விட்டவுடன் சில விநாடிகளில் ரிசல்ட் தெரிந்து விடும். இதனை உறுதி செய்ய டாக்டர்கள் அவசியமில்லை. ஓரளவுக்கு வெளிப்படையான டெஸ்ட் இது. இதே ரெடிமேட் முறையில், மஞ்சள்காமாலை பி வைரசுக்கான டெஸ்டுகளும் இருக்கின்றன. ஹெபடைடிஸ் பி ரெடிமேட் கிட் உதவியுடன் சில விநாடிகளில் வைரஸ் பாதிப்பினை உறுதி செய்து கொள்ளலாம். இது போன்ற, வெளிப்படையான – எளிமையான ரெடிமேட் கிட்டுகள் ஏன் கொரோனாவிற்கு கண்டுபிடிக்கப்படவில்லை? கண்டுபிடிக்கப்பட்டவைகளில் தவறு களையும் உத்திகள் ஏன் உருவாக்கப்படவில்லை? என்பதெல்லாம் ஆய்வுக்குழுவினருக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருந்து விட்டுப் போகட்டும். ஆக, இப்போது கொரோனாவைக் கண்டுபிடிக்கும் ஒரே ஒரு வழியாக RTPCR மட்டுமே இருக்கிறது.

 கொரோனா தர்மயுத்தம் 1.0 இல் தேனி மருத்துவக் கல்லூரியில் நடந்த ஒரு மோசடி ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தது. அதுவும் இதே RTPCR டெஸ்ட் மோசடிதான். ஒவ்வொரு நாளும் இத்தனை பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அரசு அறிவிட்டது விட்டது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் அதற்கான கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்கள் இருக்கிறார்களா? என்பதெல்லாம் அரசுக்கு எப்போதுமே பிரச்சினை இல்லை. அறிவித்ததை மருத்துவமனைகள் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். . . அவ்வளவுதான். இப்படி ஒரு நாளுக்கு இத்தனை சாம்பிள்களை எடுக்க வேண்டும் என்றும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒவ்வொரு மருத்துவப் பணியாளருக்கும் இலக்கு நிர்ணயித்தது. சாம்பிள் எடுப்பதற்கான காட்டன் ஸ்வாப்களை எடுத்துக் கொண்டு, மருத்துவப் பணியாளர்கள் தெருத்தெருவாக அலைந்தார்கள். கொரோனா டெஸ்டுகள் பற்றி ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருந்த மக்களில் பெரும்பாலோர் தப்பித்து ஓடினர். அப்படி ஒரு மருத்துவப் பணியாளர் அன்றைய கோட்டாவுக்கு ஆள் கிடைக்காமல், புதிதாக பேக் செய்யபட்டிருந்த ஸ்வாப்களை அப்படியே பிரித்து, மறுபடியும் உள்ளே வைத்து சாம்பிள் எடுக்கப்பட்டதாக மருத்துவமனையில் கொடுத்து விட்டார். சாம்பிளே எடுக்கப்படாத காட்டன் ஸ்வாபினை சோதனைக்கு உட்படுத்தினால் நெகடிவ் வரும் அல்லது சோதனை செய்ய முடியுமளவுக்கு சாம்பிள் இல்லை என்று வரும் என்று அவர் நம்பினார். அன்று மாலையில் வெளியான RTPCR ரிசல்டுகளில் சாம்பிள் எடுக்கப்படாத பல ஸ்வாப்களுக்கு பாசிடிவ் வந்திருந்தன. அப்புறம் வேறு வழியில்லாமல் உண்மைகள் ஊடகங்களில் வெளியாகின. இது ஒருபுறம் இருக்கட்டும். . .நாம் பார்க்கப் போவது RTPCR ரிசல்ட்டுகள் எவ்வாறு கொடுக்கப்படுகின்றன? என்பதைத்தான்.

நம் உடலில் இருந்து எடுக்கப்படும் சாம்பிளில் இருந்து மைக்ரோஸ்கோப் வழியாகவோ, டெஸ்டுகள் வழியாகவோ நேரடியாக வைரஸ்களைப் பார்க்க முடியாது. பாக்டீரியாக்களைப் போல வைரஸ்கள் பெரியவை அல்ல. மிக நுண்ணியவை என்பதால் பல வகை வைரஸ்களை எலக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப்புகளால் கூட பார்க்க முடியாது. அதனால், வைரஸ்கள் இருந்ததற்கான அறிகுறிகளையும், அடையாளங்களையும் வைத்து அனுமானிக்கப்படுபவைதான் டெஸ்டுகள். இந்த முறையில்தான் கொரோனா வைரசிற்கான RTPCR டெஸ்டும் செய்யப்படுகிறது. நோயாளியிடம் எடுக்கப்படும் சளியை பரிசோதிக்கும் போது, அதில் எத்தனை சி.டி. வேல்யூ (Cycle threshold) இருந்தால் பாசிடிவ் கொடுக்கலாம் என்றும் அரசு வழிகாட்டுதல்களை அறிவிக்கும். புதிய பரிசோதனைகளுக்கான அளவீடுகளை ICMR எனப்படும் Indian Council For Medical Research எனும் அமைப்புதான் வெளியிடுகிறது. இந்த இடத்தில் ஒரு உதாரணம் சொன்னால் பிரச்சினை எளிமையாகப் புரியும்.

நம் வீட்டின் உயரம் இப்போது 10 அடி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அரசு நிர்வாகம் நினைத்தால் ஒரே ஒரு வினாடியில் நம் வீடுகளின் உயரத்தினை 12 அடியாக உயர்த்தி விட முடியும். எப்படி என்ற ரகசியம் தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும். நம் வீட்டின் உயரம் 10 அடி என்று நாம் எவ்வாறு உறுதி செய்து கொண்டோம்? ஏற்கனவே, உலக அளவில் உள்ள அளவீட்டு முறைகளின் படி 12 அங்குலம் என்பது ஒரு அடி என்ற கணக்கினைக் கொண்டுதான் நம் வீட்டை அளந்தோம். திடீரென இந்திய அரசு ‘சுதேசி அளவீடு’களை வெளியிடுகிறது. உலக நாடுகள் பின்பற்றுவதை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? என்று இனிமேல், ஒரு அடி என்பது நம் நாட்டில் 10 அங்குலம்தான் என்று அறிவித்து விட்டால் என்ன ஆகும்? நம் வீட்டின் உயரம் 120 அங்குலமாக இருக்கிறது. எனவே, பழைய கணக்கின் படி 10 அடி. புதிய அறிவிப்பின் படி ஒரு அடிக்கு 10 அங்குலம் என்பதால் இப்போது 12 அடி. ஒன்றுமே செய்யாமல், நம் வீட்டின் உயரம் 12 அடியாக மாறிவிடும் அற்புதம் இதுதான். இதே போல அங்குலத்தை உயர்த்துவதன் மூலம் அடியைக் குறைக்கவும் செய்யலாம். வீட்டின் உயரம் கூடுவதும், குறைவதும் வீட்டின் கையில் இல்லை. மாறாக, அளவீடுகளின் கையில் இருக்கிறது.

ICMR ஏப்ரல் ஐந்தாம் தேதி கொரோனா டெஸ்ட் முடிவுகள் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. RTPCR டெஸ்டில் சி.டி. வேல்யூ என்பது சாதாரணமாக பலருக்கும் இருப்பதுதான். இதன் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் பாசிடிவா? அல்லது நெகடிவா? என்று முடிவு செய்ய முடியும். இதுவரை உலகம் முழுவதும் சி.டி. வேல்யூ 40 இருந்தால் பாசிடிவ் என்று பின்பற்றி வருகிறார்கள். அதுவும் டெஸ்ட் கிட்டினை தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுத்து இது மாறுபடும். இப்படி சி.டி.வேல்யூ 40 இருந்தால் பாசிடிவ் கொடுத்துக் கொண்டிருந்த நம் மருத்துவமனைகள் ஏப்ரல் ஆறாம் தேதியில் இருந்து 35 இருந்தால் பாசிடிவ் கொடுக்கலாம் என்று ICMR அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பினைப் பின்பற்றினால், பாசிடிவ் எண்ணிக்கை உயருமா? குறையுமா? இதே எண்ணிக்கை கொரோனா தர்மயுத்தம் 1.0 இல் சி.டி. வேல்யூ 24 ஆகவெல்லாம் பின்பற்றப்பட்டிருக்கிறது. பின்பு, கூடுதலாகவும் பின்பற்றப்பட்டிருக்கிறது. இப்போது கொரோனா தொற்று அதிகமாவதும் – குறைவதும் கொரோனாவின் கையில் இல்லை. நிறுவனங்கள் கையிலும், அரசின் கையிலும் இருக்கிறது. இப்போதைய கொரோனா எண்ணிக்கை மாறுபாட்டிற்கு இது மட்டுமே காரணம் என்று சொல்லவில்லை. இதுவும் மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய காரணம் என்று புரிந்து கொள்வது அவசியம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசிகளை அதிகம் பயன்படுத்திய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளன. இதே வரிசையில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகியிருப்பது தற்செயலானதுதானா? என்பதை நடுநிலையாக ஆய்வு செய்தால் உண்மைகள் வெளிவரக்கூடும்.

கொரோனா தர்மயுத்தம் 2.0 இன் மையமாக இருப்பது தடுப்பூசிகள்தான். இதுவரை வழக்கமாக பயன்படும் தடுப்பூசிகளின் அர்த்தம் கொரோனா தடுப்பூசியின் வருகையால் மாறியிருக்கிறது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகளைப் பயன்படுத்தினால் அந்த நோய் வராது என்று சொல்லபடுகிறது. உதாரணமாக, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொண்டால் பி வைரஸ் மஞ்சள் காமாலை வராது என்று சொல்வார்கள். போலியோ சொட்டு மருந்து எடுத்துக் கொண்டால் போலியோ வராது என்று சொல்வார்கள். கொரோனா தடுப்பூசியின் ஆச்சரியம் என்னவென்றால், இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வர வாய்ப்பிருக்கிறதாம். இதுவரை தடுப்பூசி என்றால் என்ன? என்று அலோபதி மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருந்த எல்லா விளக்கங்களும் கொரோனா தடுப்பூசிக்குப் பொருந்தவில்லை. இதில் இன்னொரு சிக்கலான விஷயம் ’இது அனைவருக்கும் கட்டாயமல்ல’ என்ற அறிவிப்பு. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்புகளில் தன்விருப்பத்தோடு இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளன. இது கட்டாயம் அல்ல என்றும் ஊடகங்கள் வழியாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. (இந்தியாவில் எந்தத் தடுப்பூசியுமே கட்டாயம் அல்ல என்பது வேறு விஷயம்).

கொரோனா தடுப்பூசியைத் தயாரித்த நிறுவனமோ, அதனை அங்கீகரித்த ஆய்வு நிறுவனமோ, பயன்படுத்தும் அரசுகளோ ’இந்த தடுப்பூசியால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் தாம் பொறுப்பில்லை’ என்று அறிவித்துள்ளன. மருத்துவக் காப்பீடு வழங்கும் எல்லா நிறுவனங்களும் ’கொரோனா தடுப்பூசியினால் பின்விளைவு ஏற்பட்டால் அது காப்பீட்டிற்குள் வராது’ என்றும் அறிவித்துள்ளன. எனவே தான் அரசுகள் இதனை சுய விருப்பத்தோடு எடுத்துக் கொள்ளச் சொல்கின்றன. ஒருபுறம் தன்னார்வத்தோடு எடுத்துக் கொள்ளச் சொல்லும் அறிவிப்புகள். இன்னொருபுறம், பணியாளர்களை நிர்பந்திக்கும் அரசு, தனியார் நிறுவனங்களின் அறிவிப்புகள். உதாரணமாக, தென்னிந்திய ரயில்வே தன் ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பினைச் செய்திருக்கிறது. 72 மணி நேரத்திற்குள் கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாகப் போட்டுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் போட்டுக் கொள்ளும் வரை கட்டாய விடுப்பு அளிக்கப்படும் – என்பதுதான் அந்த அறிவிப்பு. இதே போல, பல தனியார் நிறுவனங்கள் தம் பணியாளர்களை நிர்பந்திக்கின்றன. ஆனால், அரசுகள் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலேயே தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்று நீதிமன்றத்திலும், அறிவிப்பிலும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா தடுப்பூசி சிலருக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதனைத் தயாரித்த நிறுவனமே அறிவித்திருக்கிறது. கொரோனா தடுப்பூசியால் மார்ச் மாதம் 18 ஆம் தேதி வரை 103 பேர் இறந்து போயிருக்கிறார்கள் என்பதை இந்திய சுகாதாரத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட பதிலில் உறுதி செய்திருக்கிறது. இன்னும் பல உறுதி செய்யப்படாத, பதிவு செய்யப்படாத பின்விளைவுகள் தனி. குறிப்பாக, உடலில் ஒவ்வாமை அறிகுறி இருக்கும் நபர்களுக்கு இந்த தடுப்பூசி அதிகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று மருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அடிப்படையில்தான் அரசு தடுப்பூசியைக் கட்டாயமாக்கவில்லை. ஆனால், அரசு நிறுவனங்களில்/ தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயமாக தடுப்பூசி போடச் சொல்லி வற்புறுத்தப்படுகின்றனர். ஒரு ஒவ்வாமையுள்ள நோயாளிக்கு தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்த விலக்கிற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? மேலதிகாரிக்கு தடுப்பூசி போட்ட சான்றிதழ் மட்டும்தான் வேண்டும். அதைத்தவிர, எந்த அரசு அறிவிப்பும் – கட்டாயமல்ல என்கிற விளக்கங்களும் அவசியமல்ல.

 அறிவியல் இன்னொரு அடிப்படைவாதமாக மாறிக் கொண்டிருக்கிறது. அது பேரிடர்காலங்களில் பெரும் மூட நம்பிக்கையாக உருவெடுத்து விடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை கல்வி கற்றோர் அனைவருக்கும் இருக்கிறது.

அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்